' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

அழகு அணிச் சித்தர் பாடல்

 Paranjothi ThirdEye Meditation - பரஞ்சோதி நெற்றிக்கண் தியானம்

கலித்தாழிசை



1:

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ.

2:

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி.

3:

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
கோலமிட்டுப் பாரேனோ.

4:

சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா
தின்றுகளைப் பாறேனோ.

5:

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ.

6:

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ.

7:

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ.

8:

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ.

9:

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

10:

பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ.

11:

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண்விழிக்க வேகாவோ.

12:

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ

13:

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

14:

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி

15:

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி

16:

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ

17:

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்

18:

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ

19:

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன

20:

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே

21:

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி

22:

பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி

23:

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ

24:

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன

25:

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி

26:

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ

27:

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ

28:

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ

29:

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன

30:

சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ

31:

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ

32:

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ

33:

என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி
முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா
எடுத்து உரைக்க லாகாதோ?

34:

எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன்
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி
கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில்
எல்லாரும் வந்து என் கண்ணம்மா
எனக்குஏவல் செய்யாரோ.

35:

என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி
தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு
என்னை அறியாமல் என் கண்ணம்மா
இருந்தேன் ஒருவழியாய்.

36:

ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள்
சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால்
பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா
பக்கத்து இருக்காதோ.

37:

கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து
உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி
உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே
திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா
சேர்ந்தது என் சொல்லாயோ?

38:

கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப்
புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி
புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால்
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா
மயங்கித் தவிக்குறண்டி.

39:

பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா
புலன்கள் தெரியவேண்டி.

40:

ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா
நிலைதெரிய மாட்டேனோ.

41:

ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா
நன்மைபெற்று வாழ்வார்கள்.



வாத கற்பம்

42:

மூலம்நடுவீதி ஆத்தாளே மும்மண்டலத்து அமர்ந்த
நீலகண்ட வத்துவைத்தான் - ஆத்தாளே
நின்மலனைப் போற்றுவனே.

43:

மேகத்தான் விந்தாச்சு - ஆத்தாளே
விசயரவிச் சுண்ணாம்பாம்
ஆகச் சிவநீரால் - ஆத்தாளே
அட்டசித்தி அவள்சக்தி.

44:

இரவி முகத்தாலே - ஆத்தாளே
ஈசன் என்ற உப்பாச்சு
வருகங்கை தன்னாலே - ஆத்தாளே
மயமாகச் சுத்தம் செய்தே.

45:

முந்தின உப்பிரண்டும் - ஆத்தாளே
முழுக்கல்லுப் பொன்னாகத்
தொந்திக்க இவ்விடைக்க - ஆத்தாளே
சூழ்சீனங் கால்சேர்த்து.

46:

ஆறுதலச்செயநீர் - ஆத்தாளே
அதிலேகற் சுண்ணாம்பாம்
மீறுமிந்தச் சுண்ணாம்பில் - ஆத்தாளே
வீரமுடன் கற்பூரம்.

47:

சாரநீரால் அரைத்து - ஆத்தாளே
தனிக்கவச மேபூசி
ஆறுவகைச் செயநீரால் - ஆத்தாளே
அதன்மேலே சுத்திவைக்க.

48:

உப்பென்று அறியாரே - ஆத்தாளே
உலகத்தி லுள்ளோர்கள்
உப்பல்லோ சுண்ணாம்பாம் - ஆத்தாளே
ஊர்க்குள் விலைகூறுதடி.

49:

சவ்வீரம் முப்புச்சுண்ணம் - ஆத்தாளே
தனிப்பூரம் மேற்பூசி
ஒவ்வாத பான்முகத்தில் - ஆத்தாளே
ஊடுருவச் சுண்ணாம்பாம்.

50:

காரமிதில் ஏற்றலடி - ஆத்தாளே
கருஅறியார் தண்ணீரைச்
சீருடனே குத்தியடி - ஆத்தாளே
தீமுகத்தில் வாட்டிவிடு.

51:

கற்பூரச் சுண்ணமடி - ஆத்தாளே
கடுங்காரச் சுண்ணமடி
வெற்பாக வைத்தானே - ஆத்தாளே
வேதைகவர் கோடியடி.

52:

எண்ணெண் சரக்குமடி - ஆத்தாளே
இப்பூரச் சுண்ணமடி
கண்ணத்தில் வீரர்
கசதில் சுண்ணாம்பாம்.

53:

அக்காரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
ஆகரெண்டு சுண்ணமதை
உக்காரம் மேற்பூசி - ஆத்தாளே
உலையிலே வைத்தூத.

54:

எண்ணெய் எல்லாம் போக்குமடி
இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேற்கவசம் - ஆத்தாளே
சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம்.

55:

கற்பூரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
கலந்திருந்த இண்டு மடி
செப்பமுள்ள செயநீரால் - ஆத்தாளே
சேர்த்தாட்டி வீரமிட்டு.

56:

வழமலைக்கு - ஆத்தாளே
வளமாய்ப் பொதிந்தபின்பு
தழலிலே தானாட்டி - ஆத்தாளே
சற்குருவாம் உப்பாலே.

57:

உப்புச் சுண்ணங் கற்பூரம் - ஆத்தாளே
உண்மை சவுக்காரம்
செப்பமுடன் மூன்றுசுண்ணம் - ஆத்தாளே
சேர்த்துரவியில் இட்டு.

58:

இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே
எடுத்துத் துருசில் இட்டு
முக்கியமுடன் மேற்கவசம் - ஆத்தாளே
முன்பூசி வெயிலில் வைக்க.

59:

சுண்ணாம்பு தங்கியிது - ஆத்தாளே
துடிதாளகம் வெளுக்கும்
சுண்ணாம்பு வங்கமடி - ஆத்தாளே
துடிலிங்கம் கைமாட்டும்.

60:

சாதிலிங்கச் சுண்ணாம்பு - ஆத்தாளே
தனிலோகச் சுண்ணாம்பாம்
நாதாந்தச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
நாகமிதிற் சுண்ணாம்பாம்.

61:

சுண்ணாந்தா னாகவடி - ஆத்தாளே
துடிகெந்த கம்வெளுப்பாம்
சுண்ணாம்பாங் கெந்தகந்தான் - ஆத்தாளே
துடியானை பட்டுவிடும்.

62:

சூதனடி பட்டாண்டி - ஆத்தாளே
சூழ்ந்து அங்கந் தான்சேர்க்க
வேதை சவ்வீரனடி - ஆத்தாளே
மீறும்வகை மூன்றுமொன்றாய்.

63:

சேர்ந்திருக்க வேமணியாம் - ஆத்தாளே
செம்புவெள்ளி சேர்ந்தேதான்
நூத்துக்கொரு மாவிடவே - ஆத்தாளே
நூத்தெட்டு மாத்தாகும்.

64:

இத்தங்கம் செந்தூரம் - ஆத்தாளே
இந்த மணியாலே
சத்தபேதி யாகுமடி - ஆத்தாளே
தான்பரிச பேதியிதாம்.

65:

மண்டலம் பேதிக்குமடி - ஆத்தாளே
மலையும் பழுக்குமடி
அண்டத்தை தொட்டாட்ட - ஆத்தாளே
அடங்காப் பொருளாகும்.

66:

மண்ணேது கல்லேது - ஆத்தாளே
மரமேது இவ்வேதை
ஒண்ணாது வொண்ணாது - ஆத்தாளே
ஒடுங்கும் பொருளைப்பேண்.

67:

தாளகம் வெள்ளியிலே - ஆத்தாளே
தப்பாது பத்தரையும்
பாளித்த லோகச்சுண்ணம் - ஆத்தாளே
பத்தரையாம் வங்கமதில்.

68:

வீரச்சுண்ணம் வெள்ளியதாம் - ஆத்தாளே
வெள்ளிபதி னெட்டாகும்
பூரச்சுண்ணஞ் சேர்க்கவடி - ஆத்தாளே
பொன்வயதோ எண்ணான்காம்.

69:

சிலபற்பம் செம்பினிலே - ஆத்தாளே
சேர்க்கவய எட்டரையாம்
துலையாக் கவர்கோடி - ஆத்தாளே
சொன்னார் திருமூலர்.

70:

பார்த்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
பாசங் குருபாதம்
காத்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
கைமுறையாம் என்னூல்தான்.

71:

கருவை ஒளியாமல் - ஆத்தாளே
காசினியில் உள்ளோர்க்குக்
குருவைநாம் காண்பித்தோம் - ஆத்தாளே
குணமான வாதவித்தை.

72:

உண்டென்ற பேர்க்குமடி - ஆத்தாளே
உண்டாய் இருக்குமடி
சண்டாளன் ஆனாக்கால் - ஆத்தாளே
தான்லபிக்க மாட்டாதே.

73:

லபிக்க வழி சொல்லுகிறேன் - ஆத்தாளே
நந்திதிரு மூலரையும்
லபிக்கக் கா லாங்கியையும் - ஆத்தாளே
நாதாந்தப் போகரையும்.

74:

சத்தி சிதம்பரமும் - ஆத்தாளே
சட்டைமுனி பூசைசெய்வாய்
உத்தமக் கொங்கணரை - ஆத்தாளே
உசிதமாய்ப் பூசைசெய்வாய்.

75:

கருவூரா னானந்தர் - ஆத்தாளே
கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் - ஆத்தாளே
உண்மையுடன் பூசைசெய்.

76:

சண்டாளன் ஆனாலும் - ஆத்தாளே
தான்வேதை காண்பானே
கண்டசெய்தி சொன்னோன்நான் - ஆத்தாளே
கற்பவகை சொல்லுபவனே.

77:

சொல்லுகிறேன் கரிப்பான் - ஆத்தாளே
சுத்த இலைபரித்துச்
செல்லும் பழச்சாற்றில் - ஆத்தாளே
செம்பழத் தளவரைத்து.

78:

அரைத்தாவின் நெய்யதனில் - ஆத்தாளே
அதுசிவக்கக் காய்ந்த
திரமாயோர் பீங்கானில் - ஆத்தாளே
செப்பமுடன் வைத்தேதான்.

79:

பதனமாய் வண்டுகட்டி - ஆத்தாளே
பரமென்று நம்பியேதான்
திதிபூரு வந்தனிலே - ஆத்தாளே
செயல்பொருந்தும் நாள்பார்த்தும்.

80:

அமுதயோ கம்பார்த்து - ஆத்தாளே
ஆனதொரு கற்பதைக்
குமுதவொலி உண்ணாக்கில் - ஆத்தாளே
குலாவுகின்ற வாசலிலே.

81:

பெருவிரலால் அதைத்தொட்டு - ஆத்தாளே
பேதைமனம் எண்ணாமல்
ஒரு நெறியாய் நாலுதரம் - ஆத்தாளே
உயரவலம் சுற்றிடவே.

82:

நாலுதரம் சுத்திசெய்தால் - ஆத்தாளே
நன்றாய் அகக்கதவில்
ஆலமுண்டோன் தன்னாணை - ஆத்தாளே
அஞ்சுகத வுந்திறக்க.

83:

நாற்பதுநாள் கொள்வாரேல் - ஆத்தாளே
நற்கதவு ஐஞ்சுந் திறக்கும்
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் - ஆத்தாளே
தேகம் வச்ரகாயமதாம்.

84:

மறவாமற் கற்பவகை - ஆத்தாளே
மனசாரத் தின்றுவிட்டால்
இறவாமல் அட்டசித்தி - ஆத்தாளே
இக்கற்பங்கொண்ட பின்பு.

85:

உற்றதொரு கற்பமதை - ஆத்தாளே
உணவாகத் தின்றுவிட்டால்
செத்திறந்து போவதில்லை - ஆத்தாளே
திடமா யிருக்குமடி.

86:

கெதிபெற வேணுமென்றால் - ஆத்தாளே
கேளாம லேகேட்டு
மதியமுதம் கொண்டபின்பு - ஆத்தாளே
மறுகற்பம் கொண்டிடுவாய்.

87:

வேதாள கற்பமதை - ஆத்தாளே
விதுவளரும் அட்டமிநாள்
மாதாவிம் மூலிகைக்கு - ஆத்தாளே
மயமாய்நெய் வேத்யமிட்டு.

88:

நமக்கரித்துத் தரம்நோக்கி - ஆத்தாளே
நயமாக வாங்கிவந்த
நமக்கார சித்தியுடன் - ஆத்தாளே
நன்றாய் நிழலுலர்த்தி.

89:

சூரணஞ் செய்தேதான் - ஆத்தாளே
சுயமான நாள்பார்த்து
மீரும் வெருகடியாய் - ஆத்தாளே
வேண்டுந்தேன் நெய்சேர்த்து.

90:

கொள்ளவே மண்டலந்தான் - ஆத்தாளே
கூறுமட்ட சித்தியுண்டாம்
தெள்ளும் அவர்களுக்கு - ஆத்தாளே
தேவ வருடமதில்.

91:

பதினா யிரவருடம் - ஆத்தாளே
பண்பாய் இருப்பனடி
ரதிவேதப் பெண்முதலாய் - ஆத்தாளே
நன்மையுடன் மேவுவர் பார்.

92:

பூலோக மாதர்களை - ஆத்தாளே
புகலவே ஆகாது
மேலோகப் பெண்கள்சித்தி - ஆத்தாளே
மேவுதற்குந் தானாகும்.

93:

கையான்சங் காயளவு - ஆத்தாளே
கறிமிளக திற்பாதி
செய்யாதி மண்டலமே - ஆத்தாளே
தின்றால் நரைகளில்லை.

94:

திரையில்லை அட்டசித்தி - ஆத்தாளே
தேகமது எவ்வர்ணமாய்
வரைவச்ர காயமதாம் - ஆத்தாளே
வயதுமுந் நூறிருப்பன்.

95:

கொடுப்பையிலை லேசாக - ஆத்தாளே
கொள்வாயோர் மண்டலமே
நடுக்கமில்லை தான் பகலில் - ஆத்தாளே
நட்சத் திரந்தோன்றும்.

96:

பத்தியம் பச்சரிசி - ஆத்தாளே
பாலிட்ட சோறாகும்
மத்தொன்றும் ஆகாதே - ஆத்தாளே
வண்மையுடன் இக்கொடுப்பை.

97:

சமூலம் கழுவிநன்றாய் - ஆத்தாளே
தயவாய் நிழல் உலர்த்தி
சமூலம் இடித்துநன்றாய் - ஆத்தாளே
சதிராகச் சூரணஞ்செய்.

98:

பாலில் வெருகடியாய் - ஆத்தாளே
பதிமண்ட லம்கொளவே
மேலும் வச்ரகாயமடி - ஆத்தாளே
வேதையுமி நீராலே.

99:

பழுக்கும் நவலோகம் - ஆத்தாளே
பரமட்ட சித்தியுண்டாம்
அழுக்கெடுத்து வெள்ளீயம் - ஆத்தாளே
அதில் ஈய நீர்வாங்கும்.

100:

சித்திபெற்ற கற்பமடி - ஆத்தாளே
தேவ வருடமதில்
அத்தியின் தன்பிலமாய் - ஆத்தாளே
ஆயிரம் வயதிருப்பாய்.

101:

உத்தமர்க்குச் சொன்னேன்நான் - ஆத்தாளே
உயர வெளிகண்டதெல்லாம்
பத்தியுள்ள பத்தர்கட்கு - ஆத்தாளே
பலிக்கும்பார் கண்டாயே.

102:

பத்தியுடன் செய்துவந்தாள் - ஆத்தாளே
பரம்பொருளுந் தோன்றுமடி
சித்தி அடைந்தவர்க்கு - ஆத்தாளே
தெரியுமே சோதியுந்தான்.

103:

மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாளே
மருவிய சோதிதனைப்
பேணித் தொழும்அடியார் - ஆத்தாளே
பேசாப் பிரமமடி.

104:

அன்றுமுதல் இன்றளவும் - ஆத்தாளே
அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாக - ஆத்தாளே
இருந்த ரகசியந்தான்.

105:

ஓங்காரங் கொண்டு - ஆத்தாளே
உள்மூலந் தான்தெரிந்து

106:

உள்ளுணர்வாய் நின்றிருக்கும் - ஆத்தாளே
ஓங்காரம் தன்னையுமே
எள்ளுளவா கிலுந்தான் - ஆத்தாளே
ஏத்தித் துதிப்பாயே.

107:

பாவிகள் தங்களுக்கு - ஆத்தாளே
பரிவாக இந்நூலைத்
தாவிக் கொடுக்காதே - ஆத்தாளே
சண்டாளர் தங்களுக்கே.

108:

அனுபோக கற்பசித்தி - ஆத்தாளே
ஆகுமிதைப் படித்தோர்
மனுவிக்யா னந்தெரிந்து - ஆத்தாளே
வாழ்வார் வெகுகோடி.



ஆறாதாரம்

109:

ஞானநூல் கற்றால் எவன் தற்றுறவு பூண்டால் என்
மோன சமாதி முயன்றால் என் - தானாகி
எல்லாக் கவலையும் ஆற்று இன்புற் றிருப்பதுவே
சொல்லாரும் முத்தி சுகம்.

110:

மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக்
கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம்
சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி
மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே
முதலெழுத்தைப் போற்றி செய்தேன்.

111:

ஆதியெனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி
நீதியெனும் நாளமடி நின்று விசையெழுப்பி
சாதிமதி யென்னும் தாகவிடாய் தானடங்கிச்
சோதிவிந்து நாதமென்ன - என் ஆத்தாளே
சுக்கிலமாய் நின்றதடி.

112:

துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து
மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப்
பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து
செய்யவட்ட மாகியடி - என் ஆத்தாளே
சீமுல மாச்சுதடி.

113:

நவ்வோடே மவ்வாகி நாலிதழின் மேற்படர்ந்து
உவ்வோடே சவ்வாகி உயர்வுன்னி யூடெழுந்து
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற காலாகி
இவ்வோ டுதித்தாண்டி - என் ஆத்தாளே
இலங்குகின்ற திங்களடி.

114:

கதிரங்கி யாகியடி கருணையினில் விந்திரங்கி
உதிரம் திரட்டியபடி ஓமென் றதனிலுன்னி
சதுரமது மண்ணாகிச் சதுர்முகனார் வீடாகி
மதுரம் பிறந்துதடி - என் ஆத்தாளே
வையகனாய் வந்தாண்டி.

115:

மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதிற்பரந்து
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில்முளைத்துச்
செப்பார் இளமுலையார் சீருடனே தானிருந்து
அப்பாலே மாலாகி - என் ஆத்தாளே
ஆனந்த மானதடி.

116:

உன்னியப்பு மேலேயடி ஓங்கிக் கதிர்பரந்து
மின்னியதில் தான்முளைத்து மேவுகின்ற சீயாகிப்
பன்னிவரு முக்கோணப் பதியதனி லேமுளைத்து
வன்னியென்னும் பேராகி - என் ஆத்தாளே
மருவுகின்ற ருத்ரனடி.

117:

வீரான வன்னியதன் மேல்நாளந் தான்முளைத்து
ஓராறு கோணமதாய் உள்ளேஓர் காலாகிப்
பேராகி நின்றுதடி பெருங்கிளையாங் கூட்டமதில்
மாறாமல் மாறியடி - என் ஆத்தாளே
வையத் துதித்தாண்டி.

118:

உதையாமல் என்னைஇப்போது உதைத்தவனும்கீழிறங்கி
மதியான மூலமதில் வந்திருந்துக் கொண்டான்டி
நிதியாம் மிரண்டெலும்பு நீளெலும்பிரண்டாகி
முதியாத மாங்கிசமும் - என் ஆத்தாளே
மூடி யதிலிருந்து.

119:

மாதவளைக் குள்ளேயடி வந்தவது கீழ்ப்படர்ந்து
போதத்தின் முட்டியடி புகழ்நரம்பை உண்டுபண்ணி
நீதம தாகவிந்த நீள்நிலத்தி லேதிரியப்
பாதமாய் உன்னியடி - என் ஆத்தாளே
பதியாய் வளர்ந்ததடி.

120:

இருகண்ணின் மேலேயடி இருந்தநரம் பூடுசென்று
பெருநரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி
தரிநரம்பும் ஈரெலும்பாய்த் தான்ஒன்பது எலும்பாய்
விரிநரம்பு போலாக - என் ஆத்தாளே
மேலாய் நுழைந்ததடி.

121:

இட்ட எழுத்திரண்டில் ஏங்கியதில் மேற்படர்ந்து
எட்டமதி போலெலும்பு வளர்ந்து கவிந்ததடி
எட்டிரண்டும் ஒன்றாகி இருந்தவர்க்கு வீடாச்சு
வெட்டவெளி யானதடி - என் ஆத்தாளே
மெய்யாய் இருந்துதடி.

122:

அகார உகாரத்தில் ஆசூனி யம்பிறந்து
அகாரந் தனில்இரங்கி அரிமூலம் தன்னில்வந்து
உகாரத்துள் ஆவேறி ஓடி உலாவுவதற்கு
நிகரற்ற நாதனடி - என் ஆத்தாளே
லிங்கமாய் வந்தான்டி.

123:

கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ
குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
திருவாகி வந்தானோ - என் ஆத்தாளே
சீர்திருத்த வந்தானோ.



மெய்ஞ்ஞானம்



124:

ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணுமென்று
தங்காமல் வந்தொருவன் - என் ஆத்தாளே
தற்சொரூபங் கொண்டாண்டி.

125:

உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தாண்டி.

126:

ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோ ரட்சரமும்
சூதானக் கேட்டையெல்லாம் - என் ஆத்தாளே
சுட்டான் துருசாலே.

127:

என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந் தனித்தேனே - என் ஆத்தாளே
தானிருக்க மாட்டேண்டி.

128:

கல்லில் ஒளியானைக் கருத்தி விளியாளைச்
சொல்லி அழுதாலொழிய - என் ஆத்தாளே
துயரம் எனக்கு ஆறாதே.

129:

மண்முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேன்டி
விண்முதலாய் ஐம்பொறியும் - என் ஆத்தாளே
வெந்துவிடக் கண்டேன்டி.

130:

ஆங்காரந் தான்கெடவே ஆறடுக்கு மாளிகையும்
நீங்காப் புலன்களைந்தும் - என் ஆத்தாளே
நீறாக வெந்துதடி.

131:

போற்றும்வகை எப்படியோ பொறிபேத கம்பிறந்தால்
ஆத்தும தத்துவங்கள் - என் ஆத்தாளே
அடுக்கழிய வெந்ததடி.

132:

வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி
சுத்துவித்தை அத்தனையும் - என் ஆத்தாளே
சுட்டான் துருசறவே.

133:

கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன் - என் ஆத்தாளே
பதியில் இருந்தாண்டி.

134:

எல்லோரும் போனவழி இன்னவிட மென்றறியேன்
பொல்லாங்கு தீரவடி - என் ஆத்தாளே
பொறிஅழியக் காணேன்டி.

135:

உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்கமடிந்தார்கள்
இக்கோட்டைக் குள்ளாக - என் ஆத்தாளே
எல்லோரும் பட்டார்கள்.

136:

உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தாக்கால்
கற்கோட்டை எல்லாம் - என் ஆத்தாளே
கரிக்கோட்டை ஆச்சுதடி.

137:

தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசறவே
கண்ணேறு வாறாமல் - என் ஆத்தாளே
கருவருக்க வந்தான்டி.

138:

ஓங்காரம் கேட்குதடி உள்ளமெல்லாம் ஒக்குதடி
ஆங்காரம் பட்டுவிழ - என் ஆத்தாளே
அடியோடு அறுத்தாண்டி.

139:

முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னையறிந்து - என் ஆத்தாளே
தானொருத்தி யானேன்டி.

140:

என்னை எனக்கறிய இருவினையும் ஊடறுத்தான்
தன்னை அறியவாடி - என் ஆத்தாளே
தனித்திருக்கல் னேன்டி.

141:

இன்னந் தனியேநான் இங்கிருக்க மாட்டேன்டி
சொன்னசொற் றிரவடிவு - என் ஆத்தாளே
சுட்டான் துருசறவே.

142:

வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யாச்சுதடி
காட்டுக்கு எரித்தநிலா - என் ஆத்தாளே
கனாவாச்சு கண்டதெல்லாம்.

143:

நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டலவோ
பகையாரோ விண்டவர்கள் - என் ஆத்தாளே
பாசம் பகையாச்சே.

144:

என்னையிவன் சுட்டாண்டி எங்கே இருந்தான்டி
கன்னி அழித்தாண்டி - என் ஆத்தாளே
கற்பைக் குலைத்தான்டி.

145:

உள்ளுரையிற் கள்ளனடி உபாயம் பலபேசிக்
கள்ளக்கண் கட்டியடி - என் ஆத்தாளே
காலைப் பிடித்தான்டி.

146:

பற்றத்தான் பற்றுவரோ பதியி லிருந்தான்டி
எற்றத்தான் என்றவரோ - என் ஆத்தாளே
என்னை அறிந்தான்டி.

147:

கண்டாருக்கு ஒக்குமடி கசடுவித்தை அத்தனையும்
பெண்டாக வைப்பனென்று - என் ஆத்தாளே
பேசாது அளித்தான்டி.

148:

மால்கோட்டை இட்டுமென்னை வசையிலாக் காவல்வைத்
தோல்கோட்டை இட்டடியோ - என் ஆத்தாளே
தடுமாறச் சொன்னான்டி.

149:

எந்தவித மோஅறியேன் இம்மாயஞ் செய்தான்டி
சந்தைக் கடைத்தெருவே - என் ஆத்தாளே
தடுமாறச் சொன்னான்டி.

150:

சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்தூடே
பாலத்தில் ஏறியடி - என் ஆத்தாளே
பங்கம் அளித்தான்டி.

151:

பண்டிவனை நானறியேன் பலகாலம் வந்தான்டி
அண்டி இருந்தான்டி - என் ஆத்தாளே
ஆகலத்தில் வைத்தான்டி.

152:

பத்தினியாய் என்நாளும் பாடறிந்து சூடாமல்
மத்தியா னத்தில் என்னை - என் ஆத்தாளே
வாசிரிக்கச் சொன்னான்டி.

153:

வாடைதனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல்
ஆடை குலைத்து எமையும் - என் ஆத்தாளே
அலங்கோலஞ் செய்தான்டி.

154:

கற்புக் கரசிஎன்ற காரப்பேர் விட்டுஅகலப்
பொற்புக் குலைத்து எமையும் - என் ஆத்தாளே
போதம் இழந்தனடி.

155:

என்ன வினைவருமோ இன்னதெனக்கு என்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் - என் ஆத்தாளே
சொல்லறவே வெந்ததடி.

156:

கங்குல்பகல் அற்றிடத்தே காட்டிக் கொடுத்தான்டி
பங்கம் அழித்தான்டி - என் ஆத்தாளே
பாதகனைப் பார்த்திருந்தேன்.

157:

ஓதியுணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி
சாதியில் கூட்டுவரோ - என் ஆத்தாளே
சமையத்தாற் குள்ளாமோ.

158:

என்னகுற்றஞ் செய்தேனோ எல்லவருங் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம் - என் ஆத்தாளே
அறியாரோ அம்புவியில்.

159:

பொய்யான வாழ்வெனக்குப் போதமெனக் கண்டேன்டி
மெய்யான வாழ்வெனக்கு - என் ஆத்தாளே
வெறும்பாழாய் விட்டுதடி.

160:

சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையென்று
எல்லாருங் கண்டிருந்தும் - என் ஆத்தாளே
இப்போது அறியார்கள்.

161:

கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேன்டி
உன்மாயம் இட்டவனை - என் ஆத்தாளே
உருவழியக் கண்டேன்டி.

162:

என்னசெய்யப் போறேன்நான் இருந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு - என் ஆத்தாளே
காரணமாய்க் காய்த்ததடி.

163:

அந்தவிடம் அத்தனையும் அருளாய் இருந்துதடி
சொந்தம் இடமெல்லாம் - என் ஆத்தாளே
சுகமாய் மணக்குதடி.

164:

இந்தமணம் எங்கும் இயற்கைமணம் என்றறிந்து
அந்தச் சுகாதீதம் - என் ஆத்தாளே
அருட்கடலில் மூழ்கினன்டி.

165:

அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே - என் ஆத்தாளே
சச்சுபலங் கொண்டான்டி.

166:

உள்ளத்தொளி யாகவடி ஓங்காரத்து உள்ளிருக்கும்
கள்ளப் புலன் அறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தான்டி.

167:

கணக்கனார் வாசலது கதவுதான் தாள்திறந்து
பிணக்காத பிள்ளையென்று - என் ஆத்தாளே
பீடமிடம் பெற்றேன்டி.

168:

மூன்று சுழிவழியே முன்னங்கால் தான்மடித்து
ஈன்று சுழிவழியே - என் ஆத்தாளே
இசைந்திருந்த மந்திரமும்.

169:

தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே
மூன்றுவழி போகவடி - என் ஆத்தாளே
முதியமன ஆச்சுதடி.

170:

சுத்த மத்தமற்றே தொண்டராய்த் தொண்டருடன்
அத்திவித்தின் போலே - என் ஆத்தாளே
அதிகம் அளித்தேன்டி.

171:

வித்துருவத் தோடே விநாயகனைத் தாள்தொழுது
அத்துருவம் நீக்கிபடி - என் ஆத்தாளே
அறிய அளித்தேன்டி.

172:

மின்னார் விளக்கொளிபோல் மேவுமிதே யாமாகில்
என்னாலே சொல்லவென்றால் - என் ஆத்தாளே
எழும்புதில்லை என் நாவு.

173:

அரூபமாய் நின்றானை அகண்டபரி பூரணத்தைச்
சொரூபமாய் நின்றிடத்தே - என் ஆத்தாளே
தோன்றிற்றுத் தோன்றுமடி.

174:

அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும்
சட்சமையம் ஆனதுவும் - என் ஆத்தாளே
தணலாக வெந்ததடி.

175:

சமையஞ் சமையமென்பார் தன்னைஅறியாதார்
நிமைக்குள் உளுபாயமென்பார் - என் ஆத்தாளே
நிலமை அறியாதார்.

176:

கோத்திரம் கோத்திரமென்பார் குருவை அறியாதார்
தோத்திரஞ் செய்வோமென்பார் - என் ஆத்தாளே
சொரூபம் அறியாதார்.

177:

உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி
பெற்றார் இணக்கமடி - என் ஆத்தாளே
பேரில் பிணக்கமடி.

178:

தேய்ந்த இடத்திருக்கச் சிந்தைஅறியுமனம்
ஆய்ந்த இடமெல்லாம் - என் ஆத்தாளே
அவசமனம் வீசுதடி.

179:

பேதிச்சு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி
சாதிஇவன் அன்றெனவே - என் ஆத்தாளே
சமையத்தார் ஏசுவரே.

180:

நல்லோ ருடன்கூடி நாடறிய வந்ததெல்லாம்
சொல்லவாய் உள்ளவர்கள் - என் ஆத்தாளே
சொல்லி நகைப்பாரோ.

181:

இன்பமுற்று வாழ்ந்ததடி என்மாயம் ஆச்சுதடி
தம்பறத் தள்ளிவிடி - என் ஆத்தாளே
தனம்போன மாயமடி.

182:

வல்லான் வகுத்தவழி வகையறிய மாட்டாமல்
இல்லான் இருந்தவழி - என் ஆத்தாளே
இடம் அறியாது ஆனேன்டி.

183:

கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி
மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே
மலவாசல் மாண்டுதடி.

184:

ஆசாபாசம் அறியா தன்பு பொருந்தினபேர்
ஏசாரோ கண்டவர்கள் - என் ஆத்தாளே
எவரும் நகையாரோ

185:

இன்பமுற்ற பேர்கடனை எல்லோரும் பேசுவரோ
துன்பமுற்ற பேர்கடனை - என் ஆத்தாளே
சொல்லி நகையாரோ

186:

விண்ணைஎட்டிப் பாராமல் விதத்தை உற்றுப்பாராமல்
மண்ணையெட்டிப் பார்த்தொருவர் - என் ஆத்தாளே
வலுப்பேசி ஏசுவரோ.

187:

என்னையிவன் கொண்டான்டி இருவினையும் கண்டான்டி
சன்னைசொல்ல விண்டான்டி - என் ஆத்தாளே
சமையம்பிணக் கானேன்டி.

188:

இந்நிலத்திற் கண்காண ஏகாத மானிடத்தே
கன்னி அழித்தாண்ட - என் ஆத்தாளே
கற்பைக் குலைத்தாண்டி.

189:

சுத்தத்தார் பார்த்திருக்கச் சூதுபலபேசிப்
பத்தாவாய் வந்திருந்தான் - என் ஆத்தாளே
பாசமதைத் தாண்டி.

190:

அண்டத்தைக் கட்டியடி ஆசையறுத்தான்டி
தொண்டராய்த் தொண்டருக்கு - என் ஆத்தாளே
தோற்றம் ஒடுக்கமடி.

191:

கற்பனையும் மூன்றுவிதம் காரமாய்க் கொண்டேன்டி
ஒப்பனையும் அல்லவடி - என் ஆத்தாளே
ஒடுக்கம் அறியேன்டி.

192:

பாருக்குள் மாயையடி பார்க்கவெள்ளை பூத்ததடி
மேருக்குள் வெண்ணெய்யைப்போல் - என் ஆத்தாளே
முழங்கிக் கலந்திடவே.

193:

உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு
விண்ணிலே போச்சுதடி - என் ஆத்தாளே
வெகுபேரைப் பார்த்திருந்தேன்.

194:

இரும்பில்உறை நீர்போல் எனவிழுங்கிக் கொண்டான்டி
அரும்பில் உறை வாசமும்போல் - என் ஆத்தாளே
அன்றே இருந்தாண்டி.

195:

அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டதுபோல்
மக்கனப் பட்டுள்ளே - என் ஆத்தாளே
மருவி இருந்தான்டி.

196:

கங்குகரை இல்லான்டி கரைகாணாக் கப்பலடி
எங்கும்அள வில்லான்டி - என் ஆத்தாளே
ஏகமாய் நின்றான்டி.

197:

தீவரம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயங்காண்
பாவகம் ஒன் றில்லான்டி - என் ஆத்தாளே
பார்த்திட எல்லாம்பரங்காண்.

198:

உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தான்டி.

199:

அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தான்காண்
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் - என் ஆத்தாளே
மேவி இருந்தான்டி.

200:

நீரொளிபோல் எங்கும் நிறைந்த நிராமயங்காண்
பாரொளிபோல் எங்கும் - என் ஆத்தாளே
பரந்த பராபரன்காண்.

201:

நூலால் உணர்வறியேன் நுண்ணிமையை யான்அறியேன்
பாலாறு சர்க்கரைதேன் - என் ஆத்தாளே
பார்த்தறிந்த பூரணன்காண்.



கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...