' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மனிதனும் கந்தல்துணியும் ஒன்று




‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில

கால்கள் உழுத உழவு –சில

கைகள் கனிந்த கனிவு –குடிசை

எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல

இலைகள் இரண்டு வரவு-அதில்

இயற்கை கலந்த அழகு

பருத்தி என்றொரு செடி வளர்ந்தது

பருவப் பெண்ணைப் போலே –அந்தக்

கரிசல் கழனிமேலே –அது

சிரித்த அழகில் காய் வெடித்தது

சின்னக் குழந்தை போலே –அந்த

வண்ணச் செடியின் மேலே!’’

 


 

‘‘சலவை செய்து வாசம் போட்டுத்

தங்கம் போல எடுத்து-பின்

அங்கம் பொலிய உடுத்து-தன்

நிலைமை மாறிக் கிழிந்த பின்பு

நிலத்தில் என்னை விடுத்து-சென்றார்

நீண்ட கதை முடித்து’’

 

‘‘சுட்ட சோற்றுப் பானை சட்டி

தூக்கி இறக்க வந்தேன்-என்

தூய உடலைத் தந்தேன்-நிலை

கெட்டுப் போன செல்வர் போலக்

கேள்வியின்றி நின்றேன் –இன்று

கேலி வாழ்க்கை கண்டேன்!

 


 

‘‘பந்தல் போட்டு மணம் முடித்த

பருவ உடலில் துள்ளி –வாழ்ந்த

பழைய கதையைச் சொல்லி –ஏங்கும்

கந்தல் கதையைக் கேட்ட பின்பும்

காலம் அறிந்து கொள்வீர்! –வாழ்வைக்

காவல் காத்துக் கொள்வீர்!’’

 

 

‘‘மேனி அழகும் காசு பணமும்

இருக்கும் வரைக்கும் லாபம் – அதை

இழந்துவிட்டால் பாபம்! –பின்

ஞானி போலப் பாடவேண்டும்

நாய்களுக்கும் கோபம் – அதுதான்

நான் படிக்கும் சோகம்’’

 

‘‘கந்தலுக்கும் வாழ்வு வரும்

காலம் என்று உண்டு! –ஒரு

கையளவுத் துண்டு! –மேனிப்

பந்தல் தன்னை மூடிக் கொள்ள

வேண்டும் வேண்டும் என்று –ஏழை

வேண்டி நிற்பான் அன்று

கோவணமாய் ஆன போதும்

கொள்கை எனக்குண்டு – மானக்

கோட்டைக் காப்பதென்று –இன்று

கேவலமாய் ஆன போதும்

கேள்விக்குறி ஒன்று – பதில்

கேட்கிறது நின்று’’

 


 

 

 

- கவிஞர் கண்ணதாசன் -

 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...