' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

 

 

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

பாடியவர்: கணியன் பூங்குன்றனார். கணிதத்தில் வல்லவராக இருந்ததால் இவர் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு உள்ளன. ஒன்று, புறநானூற்றில் காணப்படும் 192 ஆம் பாடல். மற்றொன்று நற்றிணையில் உள்ள 226 ஆம் பாடல். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பூங்குன்றம் என்ற ஊரினர். இவ்வூர் இப்பொழுது மகிபாலன் பட்டி என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊர்தான் இப்பொழுது மகிபாலன் பட்டி என்ற குறிப்பு அவ்வூர்க் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: கணியன் பூங்குன்றனார் பரந்த மனப்பான்மை உடையவர்; இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதியவர். மக்கள் அனைவரையும் தமது உறவினராகக் கருதியவர். பரிசில் பெறுவதற்காக எந்த ஒரு மன்னரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடாமல், இவர் உலக இயல்பைப்பற்றிய தம் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
5 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
10 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

அருஞ்சொற்பொருள்:
1. கேளிர் = உறவினர். 3. நோதல் = வருந்துதல்; தணிதல் = குறைதல். 5. முனிவு = கோபம், வெறுப்பு. 7. தலைஇ = பெய்து; ஆனாது = அமையாது. 8. இரங்கல் = ஒலித்தல்; பொருதல் = அலைமோதல்; மல்லல் = மிகுதி, வளமை. 9. புணை = தெப்பம். 10. திறம் = கூறுபாடு; திறவோர் = பகுத்தறிவாளர். 11. காட்சி = அறிவு; மாட்சி = பெருமை.

உரை: எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்) அதைப் போன்றவை தான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று மகிழ்வதும் இல்லை. (உலகின் மேலுள்ள) வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை. 
 

 

 

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...